மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 3 பேர் மருத்துவமனையில் அனுமதி


மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 11 Oct 2019 10:00 PM GMT (Updated: 11 Oct 2019 8:18 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி, 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் சாதாரண காய்ச்சலுக்கும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து வருகிறார்கள். திருச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் 25 முதல் 30 பேர்வரை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருகின்றனர். திருச்சி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனியாக 2 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்புக்களை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் வரை 5 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 2 பேர் ஒரு வார கால சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆகிவிட்ட நிலையில் தற்போது 3 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்நோயாளியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் திருச்சி மாவட்டத்தில் தினமும் 50 முதல் 55 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறார்கள். திருச்சியை சுற்றியுள்ள ஒரு சில மாவட்டங்களில் இருந்தும் வந்து சிகிச்சைக்காக சேருபவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால் 70 முதல் 75 பேர் வரை தினமும் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தி்ல் செயல்பட்டு வருகிற பள்ளிகளுக்கு நேரில் சென்று ஒரு வகுப்புக்கு ஒரு மாணவன் என்கிற வீதத்தில் மொத்தம் 50 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்ய உள்ளோம்.

இந்த மாணவர்களை தூய்மை தூதுவர்களாக அறிவித்து அந்தந்த பகுதிகளில் டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்படி வலியுறுத்தி வருகிறோம். இதன் மூலம் கிராமங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடியும்.

இது தவிர, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 1,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்" என்றார்.

Next Story