ஏர்வாடி, பாளையங்கோட்டை யூனியன் பகுதியில் “சாலை, குடிநீர் பிரச்சினையை தீர்க்க பாடுபடுவேன்” காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வாக்குறுதி


ஏர்வாடி, பாளையங்கோட்டை யூனியன் பகுதியில் “சாலை, குடிநீர் பிரச்சினையை தீர்க்க பாடுபடுவேன்” காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வாக்குறுதி
x
தினத்தந்தி 11 Oct 2019 11:10 PM GMT (Updated: 11 Oct 2019 11:10 PM GMT)

ஏர்வாடி, பாளையங்கோட்டை யூனியன் பகுதிகளில் “சாலை, குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன்” என காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வாக்குறுதி அளித்தார்.

ஏர்வாடி,

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று காலை ஏர்வாடியில் வாக்கு சேகரித்தார். அவர் கை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு எல்.என்.எஸ்.புரம், சேசையாபுரம், முகைதீன்நகர், கள்ளிக்காடு சத்திரியர் நாடார் தெரு, திருவரங்கனேரி, அரபாத்நகர், புதுக்குடி, ஆர்.சி.தெரு, மற்றும் பாளையங்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட வேலாங்குளம், பெட்டைகுளம், மேலபுத்தனேரி, பாறைகுளம், அரியகுளம், மேலகுளம், தளவாய்புரம், நொச்சிகுளம் மற்றும் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நான் க‌‌ஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி இருக்கிறேன். இனிமேல் தொழிலை ஒதுக்கி வைத்துவிட்டு மீதம் உள்ள காலங்களை நாங்குநேரி தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன். தொகுதியில் தங்கியிருந்து மக்கள் குறைகளை போக்குவேன். தொகுதியில் சாலைகள், குடிநீர், சுகாதார பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன். இவ்வாறு வேட்பாளர் ரூபி மனோகரன் பேசினார்.

வாக்கு சேகரிப்பின்போது டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. உள்பட பலர் உடனிருந்தனர். களக்காடு பகுதியில் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, நடிகர் விஜய் வசந்த் பிரசாரம் செய்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நாங்குநேரி காங்கிரஸ் கட்சி காரியாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தற்போது நடக்கும் நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க.வினர் சாதனைகள் குறித்து பேச மறுக்கிறார்கள். பணத்தை செலவழித்து வெற்றி பெற துடிக்கிறார்கள். ஆனால் நமது வேட்பாளர் ரூபி மனோகரன் தூய்மையானவர். அவர் வெற்றி பெற்றால் நாங்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா தொடங்க பாடுபடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் மத்திய மந்திரி தனு‌‌ஷ்கோடி ஆதித்தன், எம்.பி.க்கள் வசந்தகுமார், செல்லக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.

நாங்குநேரியில் காங்கிரஸ் கமிட்டி தாழ்த்தப்பட்டோர் பிரிவு சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வேட்பாளர் ரூபி மனோகரன் கலந்துகொண்டு தேவேந்திர குல மக்களிடம் ஆதரவு கேட்டார்.

Next Story