மூலைக்கரைப்பட்டி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தீவிர வாக்கு சேகரிப்பு


மூலைக்கரைப்பட்டி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தீவிர வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2019 11:16 PM GMT (Updated: 11 Oct 2019 11:16 PM GMT)

மூலைக்கரைப்பட்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இட்டமொழி,

நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் நேற்று காலை மூலைக்கரைப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி முன்னாள் எம்.பி. குமார் ஆகியோர் பிரசாரத்தை தொடங்கி வைத்தனர்.

வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அங்கு திரண்டிருந்த வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:-நான் உங்கள் வீட்டு மைந்தன். உள்ளூர் வேட்பாளர். இந்த தொகுதியில் உங்களுக்காக உழைக்க காத்திருக்கிற உங்கள் வீட்டு பிள்ளை. ஏழை தொண்டனாகிய எனக்கு இரட்டை இலை சின்னத்திலே வாக்குகளை தர வேண்டும். ஏனென்றால் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சென்னையில் இருந்து இங்கு வந்திருக்கிறார். ஏற்கனவே நமது தொகுதியில் 3 தடவை சென்னையில் வசிப்பவர்களுக்கே நீங்கள் வாக்களித்து ஏமாற்றத்தை சந்தித்துள்ளீர்கள்.

இவர்கள் எல்லாம் சென்னையில் இருந்து சனிக்கிழமை காலையில் விமானத்தை பிடித்து தொகுதிக்கு வந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை விமானம் ஏறி சென்னை சென்று விடுவார்கள். இதனால் தொகுதியில் உள்ள வளர்ச்சிப்பணிகள் தடைபட்டு விட்டன. ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். நாங்குநேரி தொகுதி கிராமப்புறங்கள் நிறைந்த தொகுதி. கிராமப்புற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த எனக்கு வாக்குகள் தாருங்கள். குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவேன். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து கல்லத்தி, அரசனார்குளம், காலனி, கூனிகுளம், தான்தோன்றி, கடம்பன்குளம், எடுப்பல், பெருமாள்நகர், சின்னமூலக்கரை, நாகல்குளம், சிந்தாமணி மேலூர், கீழூர், முனைஞ்சிப்பட்டி, இந்திராநகர், கீரன்குளம், பிள்ளையார்குளம், ரெட்டார்குளம், சோமநாதபேரி, பல்லான்குளம், கீழகோடன்குளம், மேல முனைஞ்சிப்பட்டி, தோப்பூர், முத்துவீரப்பபுரம், சொக்கலிங்கபுரம், சங்கர்நகர், கூந்தன்குளம், அருமனேரி, சிலையம், காடன்குளம், பதைக்கம், பார்பரம்மாள்புரம், திருமலாபுரம், ராமனேரி, ஜெ.ஜெ.நகர், செட்டிகுளம், வெங்கட்ராயபுரம், வீரனாஞ்சேரி, சிதம்பராபுரம், தட்டான்குளம், காரியாண்டி, ராமகிரு‌‌ஷ்ணாபுரம், தினையூரணி, வடிவாள்புரம், சவளைக்காரன்குளம், சடையனேரி ஆகிய ஊர்களில் ரெட்டியார்பட்டி நாராயணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேட்பாளருடன் நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மூலைக்கரைப்பட்டி நகர செயலாளர் அசோக்குமார், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முத்துராமலிங்கம், சிந்தாமணி ராமசுப்பு, சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் சார்லஸ் ராஜா உள்பட பலர் சென்றனர்.

வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் கொங்கந்தான்பாறையில் உள்ள பரிசுத்த திருத்துவ ஆலயத்துக்கு சென்று குருவானவர் அகஸ்டின் ராஜ்குமாரிடம் ஆசி பெற்றார். அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ, புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ராஜன், மாவட்ட பாசறை தலைவர் காபிரியேல் தேவா உள்பட பலர் உடனிருந்தனர்.

வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று மீனவன்குளம், கீழ சிதம்பராபுரம், சிங்கிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் தமிழகத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்கிறார். ஒரு விவசாயி தமிழகத்தை ஆள்வதால் இன்று எழை, எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். எனவே, கிராம மக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் விரைவில் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. அரசு திகழும். அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திட வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். களக்காடு ஒன்றிய பகுதி கிராமங்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story