காலியாகிவிடுவோம் என்பதா? எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ்தான் இழந்துள்ளது அன்பழகன் எம்.எல்.ஏ. பதிலடி


காலியாகிவிடுவோம் என்பதா? எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ்தான் இழந்துள்ளது அன்பழகன் எம்.எல்.ஏ. பதிலடி
x
தினத்தந்தி 11 Oct 2019 11:56 PM GMT (Updated: 11 Oct 2019 11:56 PM GMT)

எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்துள்ள நிலையில் நாங்கள் காலியாகிவிடுவோம் என்று முதல்-அமைச்சர் கூறுவதா? என்று அன்பழகன் எம்.எல்.ஏ. பதிலடி கொடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வெங்கட்டா நகரில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., துணை செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பிரசாரத்தின்போது எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சிகள் காலியாகிவிடும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். காங்கிரஸ் தள்ளாடுகிறது என்று அக்கட்சியில் உள்ள தலைவர்களே கூறி வருகின்றனர். எனவே இடைத்தேர்தலுக்குப்பின் எதிர்க்கட்சிகள் காணாமல் போகும் என்று கூறுவதற்கான அருகதை முதல்-அமைச்சருக்கு இல்லை.

அவர் தப்பித்தவறி முதல்-அமைச்சர் பதவிக்கு வந்துவிட்டார். புதுவையில் தற்போது நாள்தோறும் வெடிகுண்டு வீச்சு, சரமாரி வெட்டு என்று செய்திகள் வருகிறது. இப்படித்தான் சட்டம் ஒழுங்கு உள்ளது. எங்கள் ஆட்சியில்தான் காவல்துறை தனது பணியை சரியாக செய்தது.  இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

இடைத்தேர்தலோடு எதிர்க்கட்சிகள் காலியாகிவிடும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறுகிறார். தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி எங்கள் கட்சி அல்ல. காங்கிரஸ் 50 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்ததால் தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்த பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் உள்ள சுயநலக்காரர்களால் தேர்தலுக்குப்பின் தலைவர் பதவியே வேண்டாம் என்று கூறிவிட்டு ராகுல்காந்தி சென்றுவிட்டார். அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சியை மக்கள் வெறுக்க ஆரம்பித்து விட்டனர்.

பல மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இதை உணராமல் எதிர்க்கட்சிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி குறை கூறி வருகிறார்.

ஆட்சியை கவிழ்த்துவிட்டு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நாராயணசாமியின் அமைச்சரவையில் உள்ள நமச்சிவாயம் சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தை ஏன் புறக்கணித்தார்? என்பதை உணராமலேயே பேசுகிறார். சட்டமன்றத்திலேயே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசை எதிர்ப்பதும், வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டுவதும் ஏன் என்பது அவருக்கு தெரியுமா?

ஆட்சி கவிழ்ப்பு என்பது எங்கள் எண்ணம் இல்லை. நேர்வழியில் 2021-ல் கூட்டணி ஆட்சி அமைப்போம். நாங்கள் ரவுடிகளை கூட்டி வந்து பிரசாரம் செய்வதாக கூறுகிறார். உண்மையில் ஆளுங்கட்சியினர்தான் ரவுடி கூட்ட தலைவர்களாக உள்ளனர். முதலியார்பேட்டையில் புதியதாக ரவுடித்தலைவர் ஒருவர் உருவாகி வருகிறார். அவர் கடந்த தேர்தலில் காங்கிரசுக்குத்தான் வேலை செய்தார். இதையெல்லாம் உணர்ந்து பேசவேண்டும். இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story