முதுகுளத்தூர் தொகுதியில் கண்மாய்களை தூர்வாரி புதிய பாலங்கள் கட்ட வேண்டும்; மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


முதுகுளத்தூர் தொகுதியில் கண்மாய்களை தூர்வாரி புதிய பாலங்கள் கட்ட வேண்டும்; மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:45 PM GMT (Updated: 12 Oct 2019 3:37 PM GMT)

முதுகுளத்தூர் தொகுதியில் கண்மாய்களை தூர்வாரி பாலங்கள் கட்ட வேண்டும் என முதல்-அமைச்சருக்கு முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

பரமக்குடி,

பரமக்குடியில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:- முதுகுளத்தூர், கமுதி ஆகிய யூனியன்களில் அதிக கிராமங்கள் உள்ளதால் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. மழைக்காலங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே நல்லுக்குறிச்சி முதல் ஆம்பல்கூட்டம் சாலையில் உள்ள ஓடையில் ஒரு பாலமும், கடலாடி ஒன்றியம் கொக்கரசன்கோட்டை முதல் டி.எம்.கோட்டை செல்லும் சாலையில் ஒரு பாலமும், கச்சம்பட்டி ஓடையில் ஒரு பாலமும், கமுதி யூனியன் பெருநாழி தென்றல் நகர் முதல் டி.குமாரபுரம் சாலையில் ஒரு பாலமும் கட்ட வேண்டும்.

கமுதி தாலுகா புதுக்கோட்டை கிராமம் அருகில் ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு அணையும், சின்ன உடப்பன்குளம் கிராமம் அருகில் ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு அணையும், ஆப்பனூர் கிராமம் அருகில் ஒரு பாலமும் கட்ட வேண்டும்.

இதேபோல முதுகுளத்தூர் புறவழிச்சாலை திட்டம் அமைப்பதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். மாவட்ட நிர்வாகமும் அதற்கு நிலம் கையகப்படுத்தி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அந்த திட்டம் விரைவில் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும். கூத்தன் கால்வாய் உள்பட முதுகுளத்தூர் தொகுதியில் நிறைய கண்மாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. தற்போது மழைக்காலமாக இருப்பதால் கண்மாய்களை தூர்வாரி மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story