மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு


மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Oct 2019 11:30 PM GMT (Updated: 12 Oct 2019 4:09 PM GMT)

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் அவர் இறந்ததாக அந்த பெண்ணின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள முத்துப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த ரம்யாகிருஷ்ணன் (வயது 23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் ரம்யாகிருஷ்ணன் கர்ப்பமானார். இதனைத்தொடர்ந்து அவர் ராமச்சந்திரபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ரம்யாகிருஷ்ணன் ராமச்சந்திரபுரம் அருகே உள்ள குன்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பரிசோதித்து ஓரிரு நாட்களில் குழந்தை பிறக்கும் என கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கு சிகிச்சையில் இருந்த ரம்யாகிருஷ்ணனுக்கு நேற்றுமுன்தினம் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில், ரம்யாகிருஷ்ணனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் ரம்யாகிருஷ்ணன் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துபோனதாக உறவினர்களிடம் டாக்டர்கள்தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, ரம்யாகிருஷ்ணனின் தந்தை மாரியப்பன், கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தபோது எனது மகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். ஆனால் டாக்டர்கள், செவிலியர்களின் தவறான சிகிச்சை மற்றும் அவர்களின் கவனக்குறைவால் தான் எனது மகள் இறந்துபோனாள். எனவே அங்கு பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உயர் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இதுதொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் கடந்த மாதம் மதுரை புதூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பிரசவம் பார்த்ததால், கர்ப்பிணி இறந்துபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story