கீழடியின் பெருமையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் - நடிகர் சசிகுமார் பேச்சு


கீழடியின் பெருமையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் - நடிகர் சசிகுமார் பேச்சு
x
தினத்தந்தி 12 Oct 2019 11:15 PM GMT (Updated: 12 Oct 2019 6:52 PM GMT)

கீழடியின் பெருமையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மதுரையில் நடந்த மாநாட்டில் நடிகர் சசிகுமார் கூறினார்.

மதுரை,

மதுரை காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பண்பாட்டு கழகத்தின் சார்பில் கீழடி வைகை நதி நாகரிகம் என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் ஜென்னி முன்னிலை வகித்தார். மண்டபத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கீழடி கண்காட்சியை தொல்லியல்துறை அறிஞர் சாந்தலிங்கம் தொடங்கி வைத்தார். மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நடிகரும், இயக்குனருமான சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் நடிகர் சசிகுமார் பேசும்போது கூறியதாவது:-

எனக்கும் கீழடிக்கும் நீண்டகால பந்தம் இருக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டு கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெற்றபோது நான் அங்கு சென்று பார்வையிட்டேன். கீழடி அகழாய்வு பணியும், அதில் கண்டறியப்பட்டுள்ள பொருட்களும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்கிறது. தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. அங்குள்ள ஒவ்வொரு விஷயமும் முக்கியமானது. தொல்லியல் துறை வல்லுனர்கள் அங்குள்ள பொருட்களை கண்டெடுக்க மிகவும் சிரமப்படுகின்றனர். அகழ்வாராய்ச்சி பணிக்கு பொறுமை மிகவும் அவசியம். கீழடியில் கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் நம்முடைய வரலாறை எடுத்துக்கூறுகிறது.

கீழடியின் வரலாறு அரசியல், மதம், சாதி சார்ந்ததல்ல. அது அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானது. அதனை யாரும் அரசியலாக்க கூடாது. இது நம்முடைய வரலாறு, யாருக்கும் விட்டும் கொடுக்கக்கூடாது. கீழடியின் மூலம், நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு என்ன என்பது தெரியவந்துள்ளது.

ஒவ்வொருவரும் கீழடியின் பெருமையை, வரலாறை அறிந்திருக்க வேண்டும். எனவே கீழடியில் கிடைக்கும் பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அருங்காட்சியகம் அமைப்பதன் மூலம் தமிழர்களின் பெருமை வருங்கால தலைமுறையினருக்கு தெரியவரும். அதுபோல், கீழடியின் பெருமையை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசும்போது, “கீழடியில் அகழாய்வு பணிகள் தொடங்கியபோது, அதனை பார்வையிட வந்த முதல் திரைப்பட கலைஞர் சசிகுமார் தான்.

அவர் தான் முதல் முதலில் கீழடிக்கு வருகை தந்தார். அவர் வந்து சென்ற பிறகு கீழடிக்கு மக்களின் வருகை அதிகரித்து விட்டது. கீழடியில் கிடைத்துள்ள கல் ஆயுதத்தின் மூலம் கீழடி 15 ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையானதாக இருக்கும் என அறிஞர்கள் சந்தேகிக்கின்றனர்“ என்றார்.

Next Story