உர விற்பனையில் முறைகேடு கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்


உர விற்பனையில் முறைகேடு கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:15 PM GMT (Updated: 12 Oct 2019 7:13 PM GMT)

உர விற்பனையில் முறைகேடு செய்ததாக கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரத்தில் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக கோவிந்தராஜன், துணைத்தலைவராக சங்கர் ஆகியோர் உள்ளனர்.

இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக குமாரராஜன்(வயது55) பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சங்கத்தில் முறைகேடு நடப்பதாக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

உரவிற்பனையில் முறைகேடு

இதன்பேரில் கூட்டுறவு மாவட்ட பதிவாளர் மாரீஸ்வரன் உமையாள்புரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது உர விற்பனையில் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த பணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என கூட்டுறவு சங்க செயலாளர் குமாரராஜனுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கூட்டுறவு சங்க செயலாளர் குமாரராஜன் பணத்தை கட்டிவிட்டார்.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில் உர விற்பனையில் முறைகேடு செய்ததற்கு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் குமாரராஜனை கூட்டுறவு மாவட்ட பதிவாளர் மாரீஸ்வரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் கூட்டுறவு சங்கத்தின் பொறுப்புகளை அங்கு பணிபுரியும் வேறு ஒருவரிடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தினார்.


Next Story