கோவில்பட்டி அருகே ரெயில் மோதி வாலிபர் பலி யார் அவர்? போலீசார் விசாரணை


கோவில்பட்டி அருகே ரெயில் மோதி வாலிபர் பலி யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Oct 2019 10:00 PM GMT (Updated: 12 Oct 2019 7:41 PM GMT)

கோவில்பட்டி அருகே ரெயில் மோதி வாலிபர் பலியானார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் பெத்தேல் விடுதி அருகில் மந்திதோப்பு ரோட்டில் ஆள் இல்லாத ரெயில்வே கேட் உள்ளது. நேற்று இந்த ரெயில்வே கேட் அருகில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதில் அவரது தலை, கைகள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன.

இறந்து கிடந்தவர் கருப்பு நிற கால்சட்டையும், சிவப்பு நிறத்தில் வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டையும் அணிந்து இருந்தார். அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரெயில் மோதி இறந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இறந்தவர் யார்? அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இறந்தாரா? ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story