காட்டுமன்னார்கோவில் அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் தந்தை புகார்


காட்டுமன்னார்கோவில் அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் தந்தை புகார்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:30 PM GMT (Updated: 12 Oct 2019 8:20 PM GMT)

காட்டுமன்னார்கோவில் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மோவூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 38). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ராஜலட்சுமி (30). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பிரபு மீண்டும் வேலைக்காக வெளிநாடு சென்றார். இதை தொடர்ந்து ராஜலட்சுமி செல்போன் மூலம் தனது கணவரிடம் பேச முயன்றார். ஆனால் அவர் சரியாக பேச வில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராஜலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்த தகவலின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தந்தையான வடலூர் ஆபத்தாரனபுரத்தை சேர்ந்த வள்ளல் என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகள் ராஜலட்சுமியின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே அவரது சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story