வேலூர் ஓட்டேரியில் குப்பைகளுக்கு தீவைக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு திடக்கழிவு மேலாண்மை கிடங்கை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


வேலூர் ஓட்டேரியில் குப்பைகளுக்கு தீவைக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு திடக்கழிவு மேலாண்மை கிடங்கை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:30 PM GMT (Updated: 12 Oct 2019 8:20 PM GMT)

ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடுக்கம்பாறை, 

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட ஓட்டேரியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக இங்கு சேரும் குப்பைகள் அங்குள்ள கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்க காண்டிராக்ட் விடப்பட்டுள்ளது.

இதனை ஏலம் எடுத்த காண்டிராக்டர் குப்பைகளை தரம்பிரித்து உரம் தயாரிக்கும் பணிக்கு பணியாளர்களை நியமித்துள்ளார். ஆனால் கடந்த சில தினங்களாக கிடங்கில் சேரும் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்படும் புகைமண்டலத்தால் சுகதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகின்றன.

நேற்றும் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அதிலிருந்து எழுந்த புகைமண்டலம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ளவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் திடக்கழிவு மேலாண்மை திட்ட குப்பை கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மாநகராட்சி உதவி ஆணையாளர் செந்தில்குமார், மேற்பார்வையாளர் முருகானந்தம், சுகாதார ஆய்வாளர் சிவா மற்றும் போலீசார் அங்கு வந்து முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குப்பையில் எரிந்த தீ அணைக்கப்பட்டது.

அங்கு வந்த திடக்கழிவு மேலாண்மை திட்ட காண்டிராக்டரிடம் மாநகராட்சி துணை ஆணையாளர் செந்தில்குமார், ஏன் இப்படி குப்பைகளை எரிக்கிறீர்கள். குப்பைகளை எரிக்காமல் அவற்றை உரமாக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் குப்பை கிடங்கில் சிதறிக்கிடந்த குப்பைகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டு ஒரே இடத்தில் குவிக்கப்பட்டது.

இதனால் சமரசம் அடைந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story