அரக்கோணம் அருகே, ஏரியில் புதைக்கப்பட்ட ஆந்திர தொழிலாளி உடல் தோண்டி எடுப்பு


அரக்கோணம் அருகே, ஏரியில் புதைக்கப்பட்ட ஆந்திர தொழிலாளி உடல் தோண்டி எடுப்பு
x
தினத்தந்தி 12 Oct 2019 11:00 PM GMT (Updated: 12 Oct 2019 8:20 PM GMT)

அரக்கோணம் அருகே ஏரியில் புதைக்கப்பட்ட ஆந்திர மாநில தொழிலாளியின் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது நண்பர்களை போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம், 

ஆந்திர மாநிலம் போட்டவலசா பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணா (வயது 52). இவர் அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். முனியப்பன்தாங்கல் கிராமத்தில் தங்கியிருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த 29-ந் தேதி மாலை 6.30 மணியளவில் முனியப்பன்தாங்கலில் இருந்து அமீர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள சிறிய பாலம் ஒன்றின் மீது அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது நிலைதடுமாறி பாலத்தில் இருந்து 20 அடி பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை நண்பர்கள் மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் இறந்து விட்டதால் போலீசார் தங்களை கைது செய்து விடுவார்களோ என பயந்து உடலை இச்சிப்புத்தூரில் உள்ள ஏரியில் யாருக்கும் தெரியாமல் புதைத்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் முன்னிலையில் தாலுகா போலீசார் பிணத்தை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி வெளியே எடுத்தனர். பிணத்தில் உடலில் ஆடைகள் எதுவும் இல்லாமல் நிர்வாணமாக அழுகிய நிலையில் இருந்தது. சம்பவ இடத்திலேயே அரக்கோணம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். உடலின் எந்த பகுதியிலும் காயம் இல்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆதிநாராயணா கீழே விழுந்து இறந்திருந்தாலும் அதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் புதைத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆதிநாராயணா இறந்த தினத்தில் அவருடன் பாலத்தில் அமர்ந்து பேசிய நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஆதிநாராயணா உடல் ஏரியில் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் இச்சிப்புத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story