காஞ்சீபுரம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவர், மாணவி பலி


காஞ்சீபுரம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவர், மாணவி பலி
x
தினத்தந்தி 12 Oct 2019 11:00 PM GMT (Updated: 12 Oct 2019 9:44 PM GMT)

மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவர், மாணவி பரிதாபமாக இறந்தனர்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த பழையசீவரம் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் வடிவேல். கூலித்தொழிலாளி. இவரது மகன் பிரவீண் குமார் (வயது 13). அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரவீண் குமாருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் பிரவீண் குமாருக்கு காய்ச்சல் குறையாததால் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் பிரவீண் குமார் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பிரவீன்குமார் பரிதாபமாக இறந்தார்.

மர்ம காய்ச்சலால் மாணவர் இறந்தது குறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருத்தணி அருகே உள்ள தெக்களூரை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் யோகேஸ்வரி (வயது 12). அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் யோகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story