போதுமான வருமானம் கிடைக்காததால் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்யும் வடகாடு பகுதி விவசாயிகள்


போதுமான வருமானம் கிடைக்காததால் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்யும் வடகாடு பகுதி விவசாயிகள்
x
தினத்தந்தி 13 Oct 2019 10:45 PM GMT (Updated: 13 Oct 2019 4:17 PM GMT)

வடகாடு பகுதி விவசாயிகள் போதுமான வருமானம் கிடைக்காததால் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்து வருகின்றனர்.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதி முற்றிலும் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள பகுதியாகும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு போதுமான அளவிற்கு மழை பெய்து குளங்கள் மற்றும் கண்மாய்கள் நிரம்பிய நிலையிலேயே இருந்ததால் குளம் மற்றும் கண்மாய் பாசனத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். மேலும், அக்காலத்தில் அதிகபட்சமாக 30 அடி முதல் 50 அடி ஆழத்திற்குள் தண்ணீர் அதிக அளவில் கிடைத்ததால் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து போனதால் நீர்மட்டம் குறைந்து கிணறுகள் தண்ணீரின்றி வறண்டது. ஆனாலும் மனம் தளராத விவசாயிகள் சுமார் 350 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து வாழை, நெல், கரும்பு, சோளம், கடலை, பூக்கள், காய்கறிகள் உள்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் நீர்மட்டம் மேலும் அதாள பாதாளத்திற்கு சென்றதால், ஆழ்குழாய் கிணறுகளும் வற்ற தொடங்கிவிட்டன.

மிளகு சாகுபடி

இருப்பினும் மனம் தளராத விவசாயிகள் 600 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து விவசாயத்தில் ஈடுபட்டனர். மேலும், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வாழை, நெல், கரும்பு, சோளம், கடலை, பூக்கள், காய்கறிகள் உள்பட பல்வேறு விவசாயத்தில் போதுமான அளவு வருமானம் கிடைக்காததால், புதிய முயற்சியாக மிளகு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடகாடு, வடக்குப்பட்டியில் மலை மற்றும் குளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையும் என்று கூறப்பட்டு வந்த மிளகு விவசாயத்தை தமது நிலத்தில் பயிரிட முடிவு செய்த விவசாயி பால்சாமி என்பவர் கேரளாவிற்கு சென்று மிளகு கன்றுகளை வாங்கி வந்து கடந்த 1991-ம் ஆண்டு நடவு செய்தார்.

ரூ.2 லட்சத்திற்கு மேல் மிளகு விற்பனை

மிளகு ரகங்கள் 36 வகை இருந்த போதும் அதில் எந்த ரகம் இப்பகுதியில் விளையும் என்றும், மேலும் அதிக விளைச்சலை கொடுக்கும் என்று சோதனை செய்து, அதில் கரிமுண்டா, காவேரி, வயநாடா ஆகிய ரக மிளகு பயிர்களை தேர்வு செய்து அதனை தென்னை, காப்பி மற்றும் சந்தன மர தோப்பில் ஊடுபயிராக பயிரிட்டார். இதனால், தற்போது ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு மிக குறைந்த செலவில் ரூ.2 லட்சத்திற்கு மேல் மிளகு விற்பனை செய்து வருகின்றார்.

இதைத்தொடர்ந்து தற்போது வடகாடு அருகே உள்ள மாங்காடு, மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகளும் மிளகு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருமுறை பயிர் செய்யப்படும் மிளகு பயிர் பயிரிட்ட 3-வது ஆண்டு முதல் மகசூல் கொடுக்க தொடங்கும். மேலும், இப்பயிர் 5 ஆண்டுகள் கடந்த நிலையில், ஒரு கொடியில் 2 முதல் 5 கிலோ வரை மிளகு கிடைப்பதாலும், ஒருமுறை நடவு செய்யப்படும் மிளகு பயிர் 30 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும் என்பதால், இதனை பயிர் செய்து அதிக அளவில் வருமானம் பெற்று வருகின்றனர்.


Next Story