தாலுகா அளவில் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்


தாலுகா அளவில் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்
x
தினத்தந்தி 13 Oct 2019 10:30 PM GMT (Updated: 13 Oct 2019 10:14 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் தாலுகா அளவில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர், 

வேளாண் பணியாளர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மாநில அரசு வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளின் நலன்கருதி, வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கி ஊக்குவித்து வருகிறது. இந்தாண்டில் வேலூர் மாவட்டத்தில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் 15 அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் சொந்தமாக வாங்கி பயன்படுத்த இயலாத நிலை காணப்படுகிறது. இவற்றை குறைந்த வாடகையில் பெற்று பயனடைய ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்த மையம் தாலுகா அளவில் அமைக்கப்படுவதால் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான வேளாண் எந்திரங்கள், கருவிகள் மற்றும் சிறுவேளாண் உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் கிடைக்கும். விவசாயிகள் இதனை பெற்று விவசாய பணிகளை உரிய நேரத்தில் மேற்கொண்டு, நல்ல மகசூல் பெற முடியும்.

இவ்வாறான மையங்களை முன்னோடி விவசாயிகள், விவசாய சுயஉதவிக்குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் அமைக்கலாம். இந்த வாடகை மையங்களுக்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை அந்தந்த பகுதிகளில் சாகுபடியாகும் பயிர்கள், மண்ணின் தன்மை, வேலையாட்கள் பற்றாக்குறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த மையங்களை நடத்த முன்வருபவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் வேளாண்மை பொறியியல் துறையினால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் எந்திரங்களில் இருந்து தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த மையங்களை அமைத்திட விரும்புபவர்கள் முதற்கட்டமாக அதற்குரிய விண்ணப்பத்தை வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அளித்திட வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் அலுவலக முன்னுரிமை பதிவேட்டில் பதியப்படும். உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு உரிய நிதி அளிக்கப்பட்டவுடன் அலுவலகம் மூலமாக முன்னுரிமை அடிப்படையில் மையங்களை நடத்த விண்ணப்பித்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இந்தாண்டில் வேலூர் மாவட்டத்தில் 15 வாடகை மையங்கள் அமைத்திட ரூ.1½ கோடி மானியத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்புவோர் வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story