மானாவாரி சம்பா நெல் சாகுபடிக்கு போதிய மழை இல்லை: டேங்கர் லாரி மூலம் நாற்றங்காலுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்


மானாவாரி சம்பா நெல் சாகுபடிக்கு போதிய மழை இல்லை: டேங்கர் லாரி மூலம் நாற்றங்காலுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
x
தினத்தந்தி 14 Oct 2019 11:00 PM GMT (Updated: 14 Oct 2019 5:47 PM GMT)

வேதாரண்யம் அருகே மானாவாரி சம்பா நெல் சாகுபடிக்கு போதிய மழை இல்லாததால் நாற்றங்காலுக்கு டேங்கர் லாரி மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி பெரும்பாலும் மழையை நம்பி நெல் சாகுபடி செய்யும் மானாவாரி பிரதேசமாகும். இந்த பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. தொடர்ந்து இந்த பகுதியில் மழை பெய்ததால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

உடனடியாக விவசாய பணிகளை தொடங்கினர். தொடர்ந்து மழை வரும் என நம்பி வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் தங்களது வயல்களை உழுது நாற்றங்கால் தயார் செய்து நெல் விதை விட்டனர். நாற்றும் நன்றாக வளர தொடங்கியது.

டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்

இந்த நிலையில் கடந்த 25 நாட்களாக மழையே பெய்யவில்லை. மாறாக, அக்னி நட்சத்திர காலங்களில் அடிப்பது போன்று வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மனிதர்களால் நடமாடக்கூட முடியாத அளவுக்கு வெயில் கடுமையாக உள்ளது. இதனால் நாற்று விட்ட சம்பா நாற்றுகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வருண பகவானின் ஆசீர்வாதத்தால் மழை பெய்யும், விவசாய பணிகளை தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்களது நாற்றங்காலில் உள்ள நாற்றுகளை காப்பாற்ற டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நாற்றங்காலில் உள்ள நாற்றுகளை காப்பாற்றி வருகிறார்கள்.


Next Story