மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்


மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Oct 2019 11:00 PM GMT (Updated: 15 Oct 2019 8:16 PM GMT)

திருச்சியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை கலெக்டர் எஸ்.சிவராசு தொடங்கிவைத்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2019-20-ம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான 47-வது ஜவஹர்லால்நேரு அறிவியல் கண்காட்சி நேற்று இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தொடங்கி வைத்துபார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-

மாணவர்கள் சொந்தமாக அறிவாற்றலை பயன்படுத்தி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நிலைகளில் அறிவியல் படைப்புகளை உருவாக்கி உள்ளனர். மாணவர்களின் அறிவாற்றலை ஊக்குவிப்பதற்கும், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. மாணவர்களின் செயல்திறன், அறிவியல் வளர்ச்சியை பொதுமக்களும் பார்த்து பயன்பெற வேண்டும்.

மாநில அளவில் தேர்வு

இந்த ஆண்டு அறிவியல் கண்காட்சிக்கு “நிலையான வளர்ச்சிக்கு அறிவியலும் தொழில்நுட்பமும்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 121-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களின் 5 படைப்புகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வருவாய் மாவட்டத்திலிருந்து 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு பிரிவில் ஒரு மாணவர் ஒரு படைப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பிரிவில் ஒரு மாணவர் ஒரு படைப்பு, 6 மற்றும் 10 ஆம் வகுப்பு பிரிவில் 2 மாணவர்கள் ஒரு படைப்பு மற்றும் ஆசிரியர் பிரிவில் ஒரு படைப்பு என 4 படைப்புகள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.

கணித கருத்தரங்கு

மேலும் கணித கருத்தரங்கில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற படைப்பு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் நடைபெறும் இந்த அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்று தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அறிவியல் கண்காட்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் சின்னராசு(திருச்சி), செல்வி (முசிறி), ராஜலிங்கம்(மணப்பாறை), அறிவழகன்(லால்குடி), ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் வின்சென்ட்டிபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story