துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அச்சக உரிமையாளர் பலி 4 பேர் படுகாயம்


துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அச்சக உரிமையாளர் பலி 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Oct 2019 10:15 PM GMT (Updated: 15 Oct 2019 8:26 PM GMT)

துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்ததில் அச்சக உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

துவரங்குறிச்சி,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்காலனி பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன்(வயது 57). அச்சக உரிமையாளர். இவர் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ராமு(47), ராமுவின் மகன் சுகன்(17), ஓய்வுபெற்ற துணை கலெக்டர் அண்ணாமலை (80), பொன்னேரியைச் சேர்ந்த கபில்தேவ் (37) ஆகியோருடன் ஒரு காரில் சிவகாசிக்கு சென்றார்.

அங்கு, தீபாவளியையொட்டி பட்டாசுகளை ஆர்டர் கொடுத்து விட்டு நேற்று முன்தினம் விருத்தாசலத்துக்கு புறப்பட்டனர். காரை கபில்தேவ் ஓட்டினார்.

கார் கவிழ்ந்தது

மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியை அடுத்த முக்கன்பாலம் அருகே நள்ளிரவில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜனார்த்தனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜனார்த்தனனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story