கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி 1,064 மாணவர்கள் பங்கேற்பு


கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி 1,064 மாணவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 Oct 2019 10:45 PM GMT (Updated: 15 Oct 2019 10:21 PM GMT)

கிருஷ்ணகிரியில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 1,064 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, அறிவியல் பெருவிழா மற்றும் கணித கருத்தரங்கு நேற்று நடந்தது. இதை கலெக்டர் பிரபாகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார்.

தொடர்ந்து கண்காட்சியை கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டு மாணவர்களின் படைப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறியதாவது:-

மாணவர்களின் ஆர்வம்

2010-20 வரையிலான ஆண்டுகள் கண்டுபிடிப்புகளுக்கான 10 ஆண்டுகள் என கொண்டாட மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவிக்கும் பொருட்டு மாணவர்களை பாடங்கள் கற்பிக்க வைப்பதுடன், பாட இணைச் செயல்பாடுகளிலும் ஈடுபட வைப்பது அவசியமாகிறது. அப்போது தான் கற்றல் முழுமையாகும்.

மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியும் முழுமையாகும். ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையும் இணைந்து மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டு மாவட்ட அளவிலான கணிதம், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி, நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்கிற கருத்தினை கொண்டு கண்காட்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.

தேசிய அளவிலான கண்காட்சி

அதன்படி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, நிதியுதவி பள்ளிகளின் பங்கேற்புடன் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 6 முதல் 8-ம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு ஒரு கண்காட்சி பொருளும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு கண்காட்சிப் பொருளும, காட்சிப்படுத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் 270 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1,064 மாணவர்களும், 80 வழிகாட்டி ஆசிரியர்களும், 20 ஆசிரியர்களும் அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்றனர்.

இதில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த 12 பேராசிரியர்கள் நடுவர்களாக நியமனம் செய்யப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களுக்குரியோர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டவர்கள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மாநில அளவில் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படுவோர் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற உள்ளனர்.

இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறினார்.



Next Story