டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை - கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு


டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை - கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 16 Oct 2019 10:45 PM GMT (Updated: 16 Oct 2019 5:14 PM GMT)

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கான கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த அலுவலர்கள் மூலமாக அந்தந்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல் சுத்தமாக பராமரித்து சுற்றுப்புற தூய்மை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வெளிப்பட்டணம், லெட்சுமிபுரம் பகுதிக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரிடையாக சென்று நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து கொசுப்புழு உற்பத்தி தடுப்பு களப்பணியாளர்கள் மூலமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று கொசுப்புழு உற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் உள்ள சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் தங்களது தினசரி பயன்பாட்டிற்காக சேமித்து வைத்துள்ள தண்ணீரை முறையாக மூடியிட்டு பராமரிக்க வேண்டும்.

சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமலும், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற குப்பைகள் சேராமலும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். அவருடன் ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், தாசில்தார் தமிழ்செல்வி மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், பணியாளர்கள் உடன் சென்றனர்.

Next Story