ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் கலெக்டர் ஆய்வு செய்வதாக உறுதி


ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் கலெக்டர் ஆய்வு செய்வதாக உறுதி
x
தினத்தந்தி 16 Oct 2019 11:00 PM GMT (Updated: 16 Oct 2019 6:51 PM GMT)

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கலெக்டர் ஆனந்த் நேரில் சந்தித்து ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்.

திருவாரூர்,

காவிரி டெல்டா பகுதி முழுவதும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு டெல்டா விவசாயிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து ஓ.என்.ஜி.சி. திட்டப்பணிகளை எதிர்த்து காவிரி டெல்டா மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் திருவாரூர் அருகே சோழங்கநல்லூர் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக எண்ணெய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நேற்று மீண்டும் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

தடுத்து நிறுத்தினர்

அப்போது திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் போலீசார் மனு அளிக்க வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அனைவரும் மனு அளிக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு சிலர் மட்டுமே கலெக்டர் ஆனந்தை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இரவு நேரங்களில் பணிக்காக பயன்படுத்தப்படும் ராட்சச எந்திரங்களின் அதிக இரைச்சல் காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியோர் என அனைவரும் தூக்கம் இன்றி அவதிப்படுகின்றனர். மேலும் வாய்க்கால், விவசாய நிலங்களில் சாலைகள் அமைத்துள்ளதால் மழை நீர் வடிய வாய்ப்பு இல்லாமல் தேங்கி சாக்கடையாக உருவெடுத்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வு செய்வதாக உறுதி

பின்னர் அவர்கள் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் கலெக்டர் அலுவலக வாசலில் காத்திருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து கலெக்டர் ஆனந்த் கலெக்டர் அலுவலக வாயிலில் நின்று கொண்டிருந்த கிராம மக்களை நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நேரில் அப்பகுதிக்கு வந்து உரிய ஆய்வு செய்வதாக உறுதியளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story