அதிக போதைக்காக மதுவில் கொக்குமருந்து கலந்து குடித்தவர் பலியான பரிதாபம்


அதிக போதைக்காக மதுவில் கொக்குமருந்து கலந்து குடித்தவர் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 16 Oct 2019 10:45 PM GMT (Updated: 16 Oct 2019 8:37 PM GMT)

வேலூர் அருகே அதிக போதைக்காக மதுவில் கொக்கு மருந்து கலந்து குடித்தவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர், 

வேலூரை அடுத்த பொய்கை மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன்கள் கார்த்தி (வயது35), வேலு. அண்ணன், தம்பிகளான இவர்கள் இருவருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. தினமும் மதுகுடித்து வந்துள்ளனர்.

இவர்கள் மதுகுடிக்கும்போது அதிக போதை இருக்கவேண்டும் என்பதற்காக, விவசாய நிலங்களில் கொக்கு வராமல் இருக்க வைக்கப்படு்ம் மருந்தை, மதுவில் கலந்து குடித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் வழக்கம்போல நேற்று முன்தினமும் மது குடித்துள்ளனர்.

அங்குள்ள புத்தூர் ஏரிக்கால்வாய் பகுதியில் அமர்ந்து மதுகுடித்துள்ளனர். அப்போது அவர்கள் மதுவில் கொக்கு மருந்து கலந்துள்ளனர். ஆனால் வழக்கத்தைவிட அதிக அளவில் கொக்கு மருந்தை கலந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த மதுவை குடித்த அண்ணன், தம்பிகளான கார்த்தி, வேலு ஆகிய இருவரும் மயங்கி விழுந்தனர். இதைபார்த்த பொதுமக்கள் அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கார்த்தி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story