பயிர் காப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


பயிர் காப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Oct 2019 11:00 PM GMT (Updated: 17 Oct 2019 7:15 PM GMT)

பயிர் காப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தவசெல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்தர்:- பயிர் காப்பீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக குறைபாடு, குளறுபடிகள் நடந்து வருகின்றன. 3 ஆண்டுகளுக்கு முன்பு காப்பீடு செய்தவர்களுக்கு கூட இன்னும் தொகை வழங்கப்படவில்லை. இது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறையும் ஏராளமானோர் விடுபட்டுள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பல இடங்களில் திறக்கப்படாமல் உள்ளது. அதனை உடனே திறக்க வேண்டும். 21 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர் காப்பீட்டு தொகை

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன்:- தஞ்சை மாவட்டத்தில் வறட்சி, வெள்ளம் ஏற்படும் போது ஆய்வுப்பணிகளை கோவில்பத்து கிராமத்தில் இருந்து தொடங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு பயிர்காப்பீட்டு இழப்பீட்டு தொகை இந்த கிராமத்துக்கு வரவில்லை. சுற்றியுள்ள கிராமங்களுக்கு வந்துள்ளது. பயிர் காப்பீட்டு தொகையை பயிர்க்கடன் நிலுவை தொகையில் வரவு வைப்பதை கைவிட வேண்டும்.

நடுக்காவேரி வீரராஜேந்திரன்:- பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2018-ம் ஆண்டு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிருக்கு ரூ..269 கோடியே 59 லட்சம் பயிர்காப்பீடு தொகை அறிவிக்கப்பட்டு 25 நாட்கள் ஆகியும் இன்னும் விவசாயிகளை சென்றடையவில்லை. காப்பீட்டு நிறுவனம் பயனாளிகள் பட்டியலை வெளியிட வேண்டும். இதில் வெளிப்படை தன்மை இல்லை. பல முறைகேடுகள் நடந்துள்ளது. இனி வரும் காலங்களில் இந்த நிலைய மாற வேண்டும். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல்லுக்கு உரிய தொகையை உடனே வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர்க் கடன் உடனடியாக வழங்கவேண்டும்.

வெளியிட வேண்டும்

திருப்பந்துருத்தி சுகுமாறன்:-2018-19-ம் ஆண்டு நெற்பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு அறுவடை ஆய்வு பணி முடிந்து 21 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டிய பயிர் இழப்பீட்டு தொகை இதுவரை 8 மாதம் ஆகியும் வழங்கப்படவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 20 ஆயிரம் பேர் விடுபட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்தவர்களின் முகவரியை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

ஆம்பலாப்பட்டு பாசனதாரர் சங்க தலைவர் தங்கவேல்:- ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாப்பட்டு கீழக்கோட்டையில் பல ஆண்டுகளாக வாடகை இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும். பிரதமரின் கவுரவ நிதி உதவி விவசாயிகள் திட்டத்தில், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் செய்தோம். அவர்கள் கேட்ட விவரம் கொடுத்தோம். இதுநாள் வரையில் மத்திய அரசு அறிவித்த நிதி உதவி எனது வங்கிக்கணக்கில் கொடுக்கப்படவில்லை. எனவே காலம் தாழ்த்தாது நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி அய்யாரப்பன்:- திருவையாறு அருகே உள்ள புனல்வாசல் வாய்க்காலில் 18 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. தற்போது தண்ணீர் வந்துள்ளது. ஆனால் இதில் இருந்து பிரிந்து செல்லும் செம்மங்குடி வாய்க்கால் மூலம் 200 ஏக்கர் பாசன வசதி பெறும். 3 கி.மீ. தூரம் உள்ள இந்த வாய்க்கால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்லவழியில்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து பாசனத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.

நிச்சயம் கிடைக்கும்

கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த கோவிந்தராஜ்:- பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை கடனில் வரவு வைக்காமல் வங்கியில் நேரடியாக செலுத்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை உடனே வழங்கவேண்டும்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தவசெல்வம் பேசுகையில், காப்பீடு செய்த அனைவருக்கும் காப்பீட்டுத்தொகை நிச்சயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார்.

Next Story