புதுக்கோட்டையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளரின் கார் தீ வைத்து எரிப்பு? போலீசார் விசாரணை


புதுக்கோட்டையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளரின் கார் தீ வைத்து எரிப்பு? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Oct 2019 11:15 PM GMT (Updated: 17 Oct 2019 7:33 PM GMT)

புதுக்கோட்டையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளரின் கார் நேற்று மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. கார் தீ வைத்து எரிக்கப்பட்டதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட நிஜாம் காலனி பேலன்ஸ் நகரை சேர்ந்தவர் வீரவடிவேல். இவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் காரில் சொந்தவேலை காரணமாக வெளியே சென்று வந்தார். பின்னர் காரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, இரவு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் வீரவடிவேலின் கார் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.

இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து வீரவடிவேலுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வீரவடிவேல் புதுக்கோட்டை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அக்கம், பக்கத்தினர் உதவியுடன் காரில் எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், காரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

தீ வைத்து எரிப்பு?

இருப்பினும் காரின் முன் பகுதி முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கணே‌‌ஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக கார் மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக உளவுத்துறை சரியில்லை

இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் புதுக்கோட்டைக்கு வந்து வீரவடிவேலின் எரிந்த காரை பார்வையிட்டார். பின்னர் சம்பவம் குறித்து வீரவடிவேலிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் தீவிரவாதம் பரவி கொண்டிருக்கிறது. தமிழக உளவுத்துறை சரியில்லை. நல்ல அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும். தீவிரவாதம் தொடர்பாக இதுவரை என்.ஐ.ஏ. தான் 133 பேரை கைது செய்தது.

இதில் 33 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். வீரவடிவேலுக்கு மிரட்டல் வந்துள்ளது. அவருக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story