எச்.விஸ்வநாத் விலைபோனது அனைவருக்கும் தெரியும் - குமாரசாமி பேட்டி


எச்.விஸ்வநாத் விலைபோனது அனைவருக்கும் தெரியும் - குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2019 11:23 PM GMT (Updated: 17 Oct 2019 11:23 PM GMT)

சாமுண்டீஸ்வரி கோவிலில் அரங்கேறிய நாடகம் தேவையற்றது என்றும், எச்.விஸ்வநாத் விலைபோனது அனைவருக்கும் தெரியும் என்றும் குமாரசாமி கூறினார்.

பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடவுள் முன்பு சத்தியம் செய்வதாக சிலர்(தகுதி நீக்க எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத்) கூறினர். சாமுண்டீஸ்வரி கோவிலில் வைத்து சத்தியம் செய்வதாக கூறுவது தவறு. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இவ்வாறு சொல்வார்கள். முன்பு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, கோவிலில் சத்தியம் செய்வது தொடர்பாக எனக்கும், எடியூரப்பாவுக்கும் இடையே பிரச்சினை வந்தது.

தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு வந்த எடியூரப்பா சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார். நான் அந்த கோவிலில் சத்தியம் செய்துவிட்டு வந்தேன். இது நடந்த சில மாதங்களில் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை இழந்தார். அவரால் கடவுளின் பார்வையில் இருந்து தப்ப முடியவில்லை.

எச்.விஸ்வநாத் பற்றி சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ. கூறிய கருத்து உண்மையானது. எச்.விஸ்வநாத் விலைபோனது அனைவருக்கும் தெரியும். அவர் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதும் தெரிந்த விஷயம். அவரை பற்றி சா.ரா.மகேஷ் அதிகமாக பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாமுண்டீஸ்வரி கோவிலில் இன்று (அதாவது நேற்று) அரங்கேறிய நாடகம் தேவையற்றது. எச்.விஸ்வநாத் பற்றி உன்சூர் தொகுதி மக்கள் முடிவு செய்வார்கள். அவர் தான் ஒரு அரிச்சந்திரன் என்று நினைத்து கொண்டிருக்கிறார். அவருக்கு சாமுண்டீஸ்வரி தாய், உரிய பாடம் புகட்டுவார்.

சா.ரா.மகேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது உண்மை தான். இதுகுறித்து சபாநாயகரிடம் நான் பேசினேன். நானும், சா.ரா.மகேசும் பிரிந்த சகோதரர்களை போல் இருக்கிறோம். அவரது நேர்மை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அவர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர். ராஜினாமாவை வாபஸ் பெறுமாறு அவரிடம் நான் கூறியுள்ளேன். பசவராஜ் ஹொரட்டி உள்ளிட்ட எங்கள் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.சி.க்கள் ரகசியமாக கூட்டம் நடத்தி இருப்பதாக அறிந்தேன்.

எனது தலைமை மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், தலைமை பதவியை தியாகம் செய்ய நான் தயாராக உள்ளேன். நான் அனைவரையும் மரியாதையாக நடத்துகிறேன். இதற்கு யாரிடமும் நான் சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை. தேவேகவுடாவுடன் பேசி புதிய தலைமையை அவர்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story