நாமக்கல்லில் மாயமான கல்லூரி மாணவி ஈரோட்டில் பிணமாக மீட்பு


நாமக்கல்லில் மாயமான கல்லூரி மாணவி ஈரோட்டில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 18 Oct 2019 11:00 PM GMT (Updated: 18 Oct 2019 7:21 PM GMT)

நாமக்கல்லில் மாயமான கல்லூரி மாணவி ஈரோட்டில் பிணமாக மீட்கப்பட்டார்.

ஈரோடு,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவாரங்காடு எம்.ஜி.ஆர். வீதி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. தறிப்பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். சின்னசாமி ஈரோடு காசிபாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அதன்பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பள்ளிபாளையம் பகுதியில் குடியேறி உள்ளார். சின்னசாமியின் மூத்த மகள் பவித்ரா (வயது 20). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 15-ந் தேதி பவித்ரா வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார்.

அதன் பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் மாயமான பவித்ராவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஈரோடு காசிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் உடல் அழுகிய நிலையில் இளம்பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக தாலுகா போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர் மாயமான பவித்ரா என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் ஈரோடு விரைந்து வந்து பவித்ராவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதைத்தொடர்ந்து பவித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பவித்ரா தன்னுடைய தங்கையிடம், தான் 4 பாடங்களில் தோல்வி அடைந்திருப்பதால் கல்லூரி படிப்பை முடிக்க முடியாது என்று கூறி வருந்தி உள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story