மின்னல் ஏற்படும் நேரங்களில் உயர்மின்கோபுரத்தின் கீழ் நிற்க கூடாது - கலெக்டர் வேண்டுகோள்


மின்னல் ஏற்படும் நேரங்களில் உயர்மின்கோபுரத்தின் கீழ் நிற்க கூடாது - கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 Oct 2019 10:45 PM GMT (Updated: 18 Oct 2019 7:42 PM GMT)

மின்னல் ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் உயர்மின் கோபுரத்தின் கீழ் நிற்க கூடாது என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- பருவமழை காலங்களில் இடி, மின்னல் போன்ற இயற்கை அபாயங்கள் ஏற்படும் போது தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பொதுமக்கள் கையாண்டு மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு மற்றும் உடமைகளுக்கு ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்த்திட வேண்டும்.

முக்கியமாக இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பயணத்தைத் தவிர்க்க வேண்டும். வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். குழந்தைகள் வீடுகளில் உள்ளனரா என்பதையும், வளர்ப்பு பிராணிகள் கொட்டகையில் உள்ளனவா என்பதையும் உறுதி செய்யவேண்டும். மேலும் வீட்டிலுள்ள மின் மற்றும் மின்னணு சாதனங்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளனவா என்று உறுதி செய்தல் வேண்டும்.

இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரத்தடியிலோ, உயர்மின் கோபுரங்களின் கீழ் மற்றும் இரும்பு வேலிகளின் அருகில் நிற்பதோ தங்குவதோ கூடாது. கால்நடைகளை மரத்தில் கட்டுவதையோ, வெளியில் மேய்ச்சலுக்கு விடுவதையோ தவிர்த்திட வேண்டும்.

மின்னணு சாதனங்களை அறவே பயன்படுத்துதல் கூடாது. மேற்கூரை வேயப்பட்ட கட்டிடங்களின் கீழ் ஒதுங்கிட வேண்டும். மிக உயரமான பகுதிகளில் உள்ள கட்டிடங்களின் கீழ் தங்குவதை தவிர்த்திட வேண்டும்.

ஆறுகள், குளங்களில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இரும்பு கொடி கம்பம், டி.வி. ஆண்டனா, செங்குத்தான உலோக சாதனங்களின் அருகில் நிற்க கூடாது. இருசக்கர வாகனங்களில் (சைக்கிள் உட்பட) செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story