ஆரணி அருகே, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் பணம், வேல் திருட்டு


ஆரணி அருகே, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் பணம், வேல் திருட்டு
x
தினத்தந்தி 18 Oct 2019 10:30 PM GMT (Updated: 18 Oct 2019 9:38 PM GMT)

ஆரணி அருகே கோவில் பூட்டு உடைக்கப்பட்டு வேல், உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணி, 

ஆரணி இலுப்பைகுணம் அருகே உள்ளது வளையல்காரர்குப்பம்கிராமம். இக்கிராமத்தின் மலைக்குன்றின் மேல் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலை நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு பூட்டி விட்டு சென்றனர்.

நேற்று காலை அவர்கள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் மெயின் இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் உள்ளே சென்று பார்த்தபோது அய்யப்பன் சன்னதி கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கருவறை அருகே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது. உண்டியல் உடைக்கப்பட்டு அதில் பணம் திருடப்பட்டிருந்தது.

அருகில் உள்ள முருகன் சாமி கருவறை பூட்டும் உடைக்கப்பட்டு வெள்ளி முலாம் பூசப்பட்ட வேல் திருடப்பட்டிருந்தது. இரவில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது அவர்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து களம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கூறுகையில், அய்யப்பன் சன்னதியில் உள்ள பீரோவில் பணம் எதுவும் இல்லை. உண்டியல் சமீபத்தில் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டுள்ளது. எனவே அதில் குறைந்த அளவிலே பணம் இருந்திருக்கலாம். எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை. இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அவர்களை தேடி வருகிறோம் என்றனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி கில்லாகருமாரியம்மன் கோவிலில் திருட்டு சம்பவமும், ஆரணி அரிசி ஆலை அதிபர் வீட்டில் 80 பவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு சம்பவமும் நடந்துள்ளதால் ஆரணி பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Next Story