குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் நிலுவை தொகை வழங்கக்கோரி போராட்டம்


குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் நிலுவை தொகை வழங்கக்கோரி போராட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2019 10:30 PM GMT (Updated: 18 Oct 2019 9:40 PM GMT)

குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் நிலுவை தொகை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, வேளாண்மை இணை இயக்குனர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி, விவசாயிகளிடம் தங்கள் பகுதிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் சரியாக இயக்கப்படுகிறதா? என்று கேட்டார். அப்போது பெரும்பாலான விவசாயிகள் சரிவர பஸ்கள் இல்லை என்றும், குறிப்பிட்ட நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்துவது இல்லை என்றும், சில பஸ்களின் இயக்க நேரம் திடீரென மாற்றம் செய்யப்படுவதாக புகார் கூறினர்.

அப்போது கலெக்டர், போக்குவரத்து துறை அதிகாரிகளிடம், பஸ்களின் இயக்க நேரம் மாற்றக்கூடாது. விவசாயிகள் கேட்டுள்ள பகுதிகளுக்கு முடிந்த வரை பஸ்களை இயக்க வேண்டும். இல்லையென்றால் நான் தலையிட்டு தனியார் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு முன்னதாக கலெக்டர் குப்பநத்தம் அணை திறப்பு விழாவுக்கு சென்றுவிட்டு மதியம் சுமார் 1 மணிக்கு வந்தார்.

முன்னதாக விவசாயிகள், போளூரில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலை மூலம் பல கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டும் என்று ஆவேசமாக பேசி போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளிக்குள் நிலுவை தொகை வழங்க வேண்டும் இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.

கூட்டத்திற்கு கலெக்டர் வந்ததும் போளூர் சர்க்கரை ஆலையின் அலுவலரிடம் நிலுவை தொகை எப்போது வழங்கப்படும் என்று கேட்டார். அதற்கு சர்க்கரை ஆலையின் அலுவலர் விரைவில் நிலுவை தொகை வழங்கப்படும் என்றார்.

Next Story