சேலத்தில் அச்சக உரிமையாளரிடம் ரூ.27½ லட்சம் மோசடி - தம்பதி கைது


சேலத்தில் அச்சக உரிமையாளரிடம் ரூ.27½ லட்சம் மோசடி - தம்பதி கைது
x
தினத்தந்தி 18 Oct 2019 11:07 PM GMT (Updated: 18 Oct 2019 11:07 PM GMT)

சேலத்தில் அச்சக உரிமையாளரிடம் ரூ.27½ லட்சம் மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலத்தில் அச்சக உரிமையாளரிடம் ரூ.27½ லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹென்றி சார்லஸ் (வயது 37). அச்சகம் நடத்தி வரும் இவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது நண்பர் ஒருவர் மூலம் ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்த நிதி நிறுவனம் நடத்தி வரும் மணிவண்ணன் (38) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் என்னிடம், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100 நாட்களில் ரூ.2 லட்சமாக தருவதாக ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பி அவரிடம் ரூ.34 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்தேன்.

இதில் ரூ.7 லட்சம் மட்டும் திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை அவர் தராமல் ஏமாற்றியதுடன் எனக்கு மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மணிவண்ணன் அவரது மனைவி இந்துமதி ஆகியோர் சேர்ந்து அச்சக உரிமையாளரான ஹென்றி சார்லசிடம் ரூ.27 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மணிவண்ணன், இந்துமதி தம்பதியரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம், 2 மடிக்கணினிகள், 13 செல்ேபான்கள், 2 சொகுசு காரகள், 10 பவுன் தங்கசங்கிலி மற்றும் போலி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story