பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 19 Oct 2019 11:50 PM GMT (Updated: 19 Oct 2019 11:50 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

மத்திய ரெயில்வே வழித்தடமான முல்லுண்டு-மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.15 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 10.37 முதல் பிற்பகல் 3.06 வரை விரைவு ரெயில்கள் அனைத்தும் திவா-பரேல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

எனவே இன்று மெயின் வழித்தடத்தில் ரெயில்கள் 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படும். பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் மும்பை சி.எஸ்.எம்.டி. வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் முல்லுண்டு-மாட்டுங்கா இடையே ஸ்லோ வழித்தடத்தில் தான் இயக்கப்படும்.

துறைமுக வழித்தடத்தில் இன்று காலை 11.30 மணி முதல் மாலை 4 வரை பன்வெல்-வாஷி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.03 மணி முதல் பிற்பகல் 3.16 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெல், பேலாப்பூருக்கும், காலை 11.06 மணி முதல் மாலை 4 மணி வரை பேலாப்பூர், பன்வெலில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் இந்த நேரத்தில் சி.எஸ்.எம்.டி.-வாஷி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேற்கு ரெயில்வேயில் இன்று காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை சர்ச்கேட்-மும்பை சென்ட்ரல் இடையே ஸ்லோ வழித்தடத்தின் இருபாதைகளிலும் பாரமரிப்பு பணிகள் நடக்கிறது. இந்த நேரத்தில் ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் சர்ச்கேட்-மும்பை சென்ட்ரல் இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். பராமரிப்பு பணிகள் காரணமாக மேற்கு ரெயில்வேயில் சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story