ஜெயங்கொண்டம் அருகே, சரக்கு வாகனம் மோதி டி.வி. மெக்கானிக் சாவு
ஜெயங்கொண்டம் அருகே, சரக்கு வாகனம் மோதி டி.வி. மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 45). டி.வி. மெக்கானிக்கான இவர் தனது வீட்டிற்கு முன்னால் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மருதூர் தெற்கு பட்டியில் இருந்து அதிவேகமாக வந்த சரக்கு வேன் செல்வம் மீது மோதிவிட்டு, சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் செல்வம் படுகாயமடைந்தார். மரம் முறிந்து வீட்டிற்கு செல்லும் மின்கம்பியில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை வாகனம் ஓட்ட அனுமதித்து விபத்திற்கு காரணமான சிறுவனின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story