பல இடங்களில் வீடு புகுந்து திருடிய 4 பேர் கைது - 41 பவுன் நகை மீட்பு


பல இடங்களில் வீடு புகுந்து திருடிய 4 பேர் கைது - 41 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 20 Oct 2019 11:00 PM GMT (Updated: 20 Oct 2019 8:38 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் வீடு புகுந்து திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 41 பவுன் நகை மீட்கப்பட்டது.

பெருந்துறை, 

பெருந்துறை அருகே உள்ள சுள்ளிப்பாளையம் வெற்றிநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 79). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் 4 பேர் அங்கு வந்தனர்.

அதில் 2 பேர் வீட்டுக்கு வெளியே நின்றனர். மற்ற 2 பேர் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு தூங்கி கொண்டிருந்த ஆறுமுகத்திடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் ஆறுமுகம் சத்தம் போட்டார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை அறிந்ததும் 4 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். இதுகுறித்து ஆறுமுகம் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் குற்றவாளிகளை பிடிக்க பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று பகல் 11 மணி அளவில் பெருந்துறை-குன்னத்தூர் ரோட்டில் வீரணம்பாளையம் நால்ரோடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.

அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் 4 பேரும் தேனி அரண்மனை நகரை சேர்ந்த முத்தையா (42), ஆறுமுகம் (37), காளிமுத்து (30), புஞ்சைபுளியம்பட்டி பனையம்பள்ளி அருகே உள்ள புஜங்கானூர் எஸ்.பி.என்.நகரை சேர்ந்த சிவா (35) ஆகியோர் என்பதும், 4 பேரும் சுள்ளிப்பாளையம் வெற்றிநகரில் ஆறுமுகம் என்பவரது வீடு புகுந்து 2 பவுன் நகையை பறித்ததையும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி பெருந்துறை ஈரோடு ரோட்டில் உள்ள வாய்க்கால்மேடு லேனா அவென்யூவில் குடியிருக்கும் பிரகாசின் மனைவி சவீதாவிடம் 11 பவுன் நகையை பறித்தது தெரியவந்தது.

ஏப்ரல் மாதம் 16-ந் தேதி அன்று கோபி புதுப்பாளையம் ஜே.ஜே.நகர் ஆனந்த் என்பவரது வீடு புகுந்து 2 பவுன் தங்க சங்கிலியையும், மே மாதம் 14-ந் தேதி அன்று பெருந்துறை நேருவீதியில் உள்ள கால்நடை டாக்டர் செங்கோடனின் வீட்டில் 16 பவுன் நகையையும் பறித்துள்ளனர்.

ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி அன்று இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த கோபி சவண்டப்பூர் பாரதிநகரை சேர்ந்த சந்திரனின் வீடு புகுந்து அவருடைய மனைவி மங்கையர்க்கரசி மற்றும் கவுந்தப்பாடி சலங்கபாளையத்தை சேர்ந்த ராமேஸ்வரன் மனைவி ரங்கநாயகியிடம் (36) 5 பவுன் தாலிசங்கிலியை பறித்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப் பட்ட 41 பவுன் நகையும் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரும் ெபருந்துறை முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மாஜிஸ்திரேட்டு சவீதா விசாரித்து 4 பேரையும் 15 நாட்கள் காவலில் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story