சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 21 Oct 2019 10:45 PM GMT (Updated: 21 Oct 2019 5:10 PM GMT)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.

திருச்சி, 

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமசந்திராநகரை சேர்ந்தவர் உஸ்மான் (வயது 75). ஆட்டோ டிரைவர். இவர் திருச்சியை சேர்ந்த 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமியை பள்ளிக்கு தினமும் ஆட்டோவில் அழைத்து சென்று வந்தார்.

அப்போது அந்த சிறுமிக்கு உஸ்மான் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். கடந்த 23.10.2017 அன்று பள்ளியில் இருந்து ஆட்டோவில் அழைத்து வந்த போது சிறுமிக்கு உஸ்மான் பாலியல் தொந்தரவு செய்தார்.

இதுபற்றி சிறுமி தனது தாயாரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் தாயார், இதுகுறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் உஸ்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி வனிதா முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ டிரைவர் உஸ்மானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

அத்துடன், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story