தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தீபாவளி பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டது


தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தீபாவளி பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டது
x
தினத்தந்தி 22 Oct 2019 10:30 PM GMT (Updated: 22 Oct 2019 5:08 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்கும் போது எதிர்பாராமல் ஏற்படும் காயங்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் குழு தலைமையில் சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ வசந்தாமணி கூறிய தாவது:-

தீபாவளி பண்டிகையின் போது எதிர்பாராமல் ஏற்படும் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தீக்காய வார்டு அமைத்துள்ளோம். இந்த சிறப்பு தீக்காய வார்டு வரும் 26, 27, 28 ஆகிய 3 தேதிகளில் 24 மணி நேரம் முழுமையாக செயல்படும். இந்த சிறப்பு தீக்காய வார்டு 10 படுக்கை வசதி கொண்டது.

இந்த சிறப்பு தீக்காய வார்டு ஒரு மருத்துவ பேராசிரியர் உள்பட 3 டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் தீக்காய சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் தீபாவளி பண்டிகையின் போது தீ விபத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. எனவே கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையின் போது குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பில் பட்டாசு வெடிக்க வேண்டும். மிகவும் இறுக்கம் இல்லாத பருத்தி ஆடைகள் உடுத்தி பட்டாசு வெடிக்க வேண்டும். தீக்காயம் ஏதும் ஏற்பட்டால் தண்ணீரால் காயத்தை கழுவியபின், சுத்தமான பருத்தி துணியை வைத்து சுற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். தீக்காயம் ஏற்பட்ட உடனே அதன்மீது வீட்டில் உள்ள எண்ணெய், காபி தூள், மஞ்சள் தூள், பேனா மை உள்ளிட்டவைகளை தடவக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story