டெல்லி, சார்ஜா, கொழும்பு, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்


டெல்லி, சார்ஜா, கொழும்பு, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Oct 2019 11:00 PM GMT (Updated: 22 Oct 2019 7:31 PM GMT)

டெல்லி, சார்ஜா, கொழும்பு, துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 76 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தபோது, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராசிக் அகமது (வயது 45) என்பவரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பேசினார். உடனே அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.92 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 330 கிராம் எடைக்கொண்ட 20 தங்கக்கட்டிகளை கைப்பற்றினார்கள்.

இதைப்போல் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த ஹிக்கமத்துல்லா (40), நைனா முகமது (30), முஸ்தபா (27), முகமது நோவான்(23) ஆகிய 4 பேரை சந்தேகத்தின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குபின் முரணாக பேசியதால், தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்கள் 4 பேரிடம் இருந்து ரூ.60 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 500 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அப்போது, கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த பெண்கள் ஆனந்தரீகன் (37), மேரி சந்திரகலா(41) ஆகியோரின் உடமைகளில் தங்க சங்கிலிகள், வளையல்கள் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பெண்களிடமிருந்து ரூ.24 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 614 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

நேற்று ஒரே நாளில் இலங்கை பெண்கள் உள்பட 7 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 76 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 444 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக கர்நாடக வாலிபர் ராசிக் அகமது என்பவரை கைது செய்தனர்.

மேலும் இந்த 7 பேரிடம் தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story