வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.300 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு


வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.300 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2019 10:00 PM GMT (Updated: 22 Oct 2019 9:33 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.300 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.300 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

வேலை நிறுத்தம்

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும், வங்கி கிளைகளை மூடக்கூடாது, ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், வராக்கடன்களை கடுமையான சட்டங்கள் இயற்றி வசூலிக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் வங்கி அதிகாரிகள் பணிக்கு வந்து இருந்தனர். இதனால் வங்கிகள் திறந்து இருந்தாலும் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பணிகள் நடைபெறவில்லை.

ரூ.300 கோடி

இதுகுறித்து தூத்துக்குடி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘தூத்துக்குடி மாநகரில் உள்ள 22 வங்கி கிளைகள் உள்பட மாவட்டம் முழுவதும் 112 வங்கி கிளைகள் உள்ளன. இந்த வங்கிகளை சேர்ந்த சுமார் 1,000 ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் ரூ.300 கோடி வரை பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

Next Story