கும்பகோணத்தில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண்டாள் சிலை மீட்பு திருடி வந்து வீசப்பட்டதா? போலீசார் விசாரணை


கும்பகோணத்தில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண்டாள் சிலை மீட்பு திருடி வந்து வீசப்பட்டதா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 Oct 2019 11:15 PM GMT (Updated: 24 Oct 2019 3:35 PM GMT)

கும்பகோணத்தில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண்டாள் உலோக சிலை மீட்கப்பட்டது. அந்த சிலை திருடி வந்து கால்வாயில் வீசப்பட்டதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். நகர் பகுதி வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயை நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கால்வாயில் சாக்குப்பை ஒன்று கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அந்த சாக்குப்பையை கால்வாயில் இருந்து வெளியே எடுத்து வந்து பிரித்து பார்த்தபோது அதில் 2 அடி உயரம் கொண்ட ஆண்டாள் உலோக சிலை இருந்தது. இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கும்பகோணம் உதவி கலெக்டர் வீராசாமி, துணை போலீஸ் சூப்பரண்டு ஜெயச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் விமல், கிராம நிர்வாக அதிகாரி சுரேந்தர் ஆகியோர் அங்கு சென்று சிலையை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து சிலை கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

கழிவுநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட உலோக சிலை பட்டறையில் இருந்து திருடப்பட்டதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். திருடிய சிலையை பதுக்கி வைப்பதற்காக கழிவு நீர் கால்வாயில் வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த சிலை திருடப்பட்ட சிலையா? எங்கிருந்து திருடப்பட்டது? திருடியவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story