கார் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்த டிரைவரை அலைக்கழித்த வங்கிக்கு ரூ.90 ஆயிரம் அபராதம்


கார் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்த டிரைவரை அலைக்கழித்த வங்கிக்கு ரூ.90 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 24 Oct 2019 10:15 PM GMT (Updated: 24 Oct 2019 7:23 PM GMT)

கார் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்த டிரைவரை அலைக்கழித்த வங்கிக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் கலாநிதி(வயது 29). டிரைவரான இவர் சொந்தமாக கார் வாங்க தாட்கோ மூலம் கடன் கேட்டு, லாடபுரம் கிராமத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடந்த 2016-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தின் மீதான நிலைகுறித்து, தாட்கோ மேலாளருக்கு தகவல் தெரிவிக்காமலும், கடன் வழங்காமலும் 4 மாதமாக வங்கி அதிகாரிகள் கலாநிதியை அலைக்கழித்துள்ளனர்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கலாநிதி, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இழப்பீடு பெற்று தரக்கோரியும் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

ரூ.90 ஆயிரம் அபராதம்

இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. கடன் வழங்காமல் அலைக்கழித்த சம்பந்தப்பட்ட வங்கிக்கு ரூ.75 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவு ரூ.15 ஆயிரம் என ரூ.90 ஆயிரத்தை 2 மாதத்திற்குள் கலாநிதிக்கு வழங்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தர்மர் தீர்ப்பளித்தார்.

மேலும், கடன் வழங்காமல் அலைக்கழித்த வங்கியின் மேலாளர் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

Next Story