மாவட்டத்தில் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்; கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை


மாவட்டத்தில் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்; கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 25 Oct 2019 10:30 PM GMT (Updated: 25 Oct 2019 7:26 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அவர்களுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. அதாவது பகலில் வெயிலும், மாலை அல்லது இரவில் மழையும் பெய்து வருகிறது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மட்டும் காய்ச்சலால் நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் போதிய படுக்கை வசதியின்றி கீழே படுத்தும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே இந்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. அவை மனிதர்களை கடித்து டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே 36 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 11 பேருக்கு காய்ச்சல் குறைந்து விட்டது. இருப்பினும் அவர்களை காய்ச்சலுக்கு பின் கவனிப்பு பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட நடுவீரப்பட்டு தர்மராஜ் மனைவி லெட்சுமி, பண்ருட்டி கலைச்செல்வி (வயது 50), கரும்பூர் குச்சிப்பாளையம் சத்தியவேணி, பண்ருட்டி எல்.என்.புரம் கமாலுதீன், பெரியார் சமத்துவபுரம் ஜெயா (40), கல்குணம் அலெக்சாண்டர் மற்றும் சேந்திரக்கிள்ளை, சிறுதொண்டாதேவி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இந்த விவரம் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 15 பேரும் டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பற்றி அரசு மருத்துவமனை நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபுவிடம் கேட்ட போது, கடலூர் மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவர்களை கடலூர் அரசு மருத்துவமனை டெங்கு சிறப்பு வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்றார்.

Next Story