வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் திடீர் உண்ணாவிரதம்


வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் திடீர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 26 Oct 2019 11:30 PM GMT (Updated: 26 Oct 2019 6:26 PM GMT)

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி வேலூர் ஜெயிலில் நளினி, முருகன் இருவரும் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், அவருடைய மனைவி நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், நளினி மத்திய பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 27 ஆண்டுகளாக ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகள், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 7 பேரின் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. அதையடுத்து தமிழக அமைச்சரவை கூடி 7 பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக கவர்னருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இதுதொடர்பாக கவர்னர் எந்த முடிவும் இதுவரை தெரிவிக்கவில்லை.

அதன்காரணமாக முருகன் கடந்த பிப்ரவரி மாதம் 7 பேரின் விடுதலை பரிந்துரையை கவர்னர் உடனடியாக ஏற்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள். அல்லது உண்ணாவிரதம் இருந்து சாகவிடுங்கள் என்று உண்ணாவிரதம் இருந்தார். அதைத்தொடர்ந்து சில நாட்களில் நளினியும் ஜெயிலில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சிறைத்துறை உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் முருகன் தங்கியிருந்த அறையில் ஆன்ட்ராய்டு செல்போன், 2 சிம்கார்டுகள், ஹெட்போன் ஆகியவை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கியது. இதுதொடர்பாக முருகன் மீது பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து முருகன் வேறு அறைக்கு மாற்றப்பட்டார். மேலும் அவருக்கு சிறையில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் 3 மாதங்கள் ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் முருகன்-நளினி சந்திப்பு மற்றும் வக்கீலை தவிர பார்வையாளர்களை சந்திக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பெண்கள் ஜெயிலில் உள்ள நளினி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி இன்று (அதாவது நேற்று) முதல் உண்ணாவிரதம் இருக்கபோவதாக நேற்று முன்தினம் சிறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளார். அதன்பேரில் அவர் நேற்று காலை முதல் சாப்பிடாமல் உண்ணாவிரத போராட்டம் செய்து வருகிறார். சிறைத்துறை சார்பில் வழங்கப்படும் உணவை நளினி சாப்பிடவில்லை. சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர் தெரிவித்ததாக சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே ஆண்கள் ஜெயிலில் தனிஅறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனும் சிறை அதிகாரிகளிடம் மனு அளிக்காமல் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஜெயிலில் உண்ணாவிரதம் இருப்பது தொடர்பாக முருகன் எந்த மனுவும் சிறை நிர்வாகத்திடம் அளிக்கவில்லை. மனு அளித்தால் தான் உண்ணாவிரதம் இருப்பதாக கருத்தில் கொள்ளப்படும். அவருக்கு தினமும் வழங்கப்படும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர். நளினி- முருகன் உண்ணாவிரத போராட்டத்தால் ஜெயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று காலை நளினி மற்றும் முருகனை அவரது வக்கீல் புகழேந்தி நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனுக்கு கடந்த 7 நாட்களாக சரியாக சாப்பாடு வழங்கவில்லை. அதன்காரணமாக அவர் உடல்நிலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. முன்கூட்டியே விடுதலை மற்றும் உயிருக்கு மோசமான நிலையில் காணப்படும் கணவரை காப்பாற்றக்கோரி நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்றார்.

Next Story