தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் ஜவுளிக்கடைகளில் விற்பனை உச்சக்கட்டம் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி


தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் ஜவுளிக்கடைகளில் விற்பனை உச்சக்கட்டம் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 26 Oct 2019 10:45 PM GMT (Updated: 26 Oct 2019 10:10 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கடைவீதியில் உள்ள ஜவுளிக் கடைகளில் உச்சக்கட்ட விற்பனை நடந்தது. மாநகரில் நிலவிய கடுமையான போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

சேலம்,

தீபாவளி பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் கடைவீதியில் உள்ள ஜவுளிக்கடைகளில் புது துணிகள் விற்பனை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் வழக்கத்தைவிட கடைவீதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அந்த வழியாக ஆட்டோ, பஸ், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் எதுவும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஜவுளிக்கடைகளிலும், சாலையோர கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்தது.

இந்தநிலையில், நேற்றும் காலை முதல் இரவு வரையிலும் கடைவீதிக்கு வந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. தீபாவளி விற்பனை உச்சக்கட்டமாக நடந்ததை காண முடிந்தது. சாலையோர கடைகளில் சேலை, சுடிதார், பேண்ட், சர்ட், சிறுவர், சிறுமிகளுக்கான ஆடைகள் விற்பனை மும்முரமாக நடந்தது. இதுதவிர, பெண்கள் பயன்படுத்தும் வளையல், கம்மல், கைப்பை மற்றும் செருப்பு வியாபாரம் தீவிரமாக நடந்தது.

ஜவுளிக்கடைகளில் கூட்டம்

சேலம் டவுன் சின்னக்கடை வீதி, பெரியக்கடை வீதி, அருணாசல ஆசாரி தெரு, தாதுபாய்குட்டை பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதேபோல், 4 ரோடு, 5 ரோடு, ஏ.வி.ஆர்.ரவுண்டானா, அழகாபுரம், குகை பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் மக்கள் அதிகளவு திரண்டிருந்தனர். சேலம் மாநகரில் உள்ள இனிப்பு கடைகள் மற்றும் பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சேலம் கடை வீதியில் டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். திருட்டு சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக மாறுவேடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள், பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றுவிடுவார்கள், எனவே கவனமாக இருங்கள்... என்று ஒலி பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

சேலம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் நேற்று மாலை முதல் இரவு வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முள்ளுவாடி கேட் பகுதியில் நிலவிய போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதை ஒழுங்குப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். வெளியூர் செல்லும் பயணிகள் அதிகமாக புதிய பஸ் நிலையத்திற்கு வந்ததால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சேலத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

Next Story