ஆதித்ய தாக்கரேயை முதல்-மந்திரி ஆக்க கோரி போஸ்டர்கள் - சிவசேனா தொண்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு


ஆதித்ய தாக்கரேயை முதல்-மந்திரி ஆக்க கோரி போஸ்டர்கள் - சிவசேனா தொண்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Oct 2019 11:00 PM GMT (Updated: 27 Oct 2019 9:54 PM GMT)

ஆதித்ய தாக்கரேயை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்று சிவசேனா தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அதிக இடங்களை பிடித்தது. இதைத்தொடர்ந்து சுழற்சி முறையில் முதல்-மந்திரி பதவியை இருகட்சிகளும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இந்த பிரச்சினையில் பா.ஜனதா மவுனம் காத்து வருகிறது.

ஒர்லி தொகுதியில் போட்டியிட்ட சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனும், யுவசேனா தலைவருமான ஆதித்ய தாக்கரே அபார வெற்றி பெற்றார்.

தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக தேர்தலில் களம் இறங்கியது ஆதித்ய தாக்கரேதான். முதல் தேர்தலிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளதால் சிவசேனா தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்தநிலையில்தான் ஆதித்ய தாக்கரேயை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொண்டர்கள் மும்பை ஒர்லி பகுதியில் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.

ஆதித்ய தாக்கரேக்கு முதல்-மந்திரி பதவி கேட்பதால் கூட்டணி ஆட்சி அமைப்பதில் பா.ஜனதா, சிவசேனா இடையே இழுபறி நீடித்து வரும் சூழ்நிலையில் இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story