தீபாவளியன்று விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 225 கிலோ செத்த கோழி இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


தீபாவளியன்று விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 225 கிலோ செத்த கோழி இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Oct 2019 11:00 PM GMT (Updated: 28 Oct 2019 6:38 PM GMT)

தீபாவளியன்று விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 225 கிலோ செத்த கோழி இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தங்கவேல், கேசவராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் திருப்பூர் குமரானந்தபுரம், மருதாசலபுரம் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தீபாவளி பண்டிகை தினத்தன்று கோழி இறைச்சியை பொதுமக்கள் வாங்குவது வழக்கம். அதனால் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து செத்த கோழிகளை திருப்பூருக்கு கொண்டு வந்து அதை சிலர் இறைச்சிக்காக விற்பனை செய்கிறார்கள் என்ற புகாரை தொடர்ந்து அதிகாரிகள் இந்த ஆய்வை நடத்தினார்கள்.

அப்போது குமரானந்தபுரம், மருதாசலபுரம் பகுதியில் உள்ள ஒரு காலியிடத்தில் 150 செத்த கோழிகளை கொண்டு வந்து சுத்தம் செய்து மஞ்சள் தடவி அதை நாட்டுக்கோழி போல் தென்னம்பாளையத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் விற்பனைக்கு தயார் செய்தது தெரியவந்தது.

இதை செய்து கொண்டிருந்த விஜய்(வயது 24), காயத்திரி(30), லதா(45), அமுதா(36), இன்பவள்ளி(45) ஆகிய 5 பேரை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 225 கிலோ செத்த கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கூறும்போது, சம்பந்தப்பட்ட 5 பேரையும் மாவட்ட வருவாய் அதிகாரி முன்னிலையில் வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தொடரும் என்றார்.

Next Story