திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தை ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்குகிறது


திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தை ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்குகிறது
x
தினத்தந்தி 28 Oct 2019 11:00 PM GMT (Updated: 28 Oct 2019 7:50 PM GMT)

இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தை ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

திருச்சி,

தமிழகத்தின் மைய பகுதியான திருச்சியில் மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் என 2 பஸ் நிலையங்கள் உள்ளன. இதில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, நெல்லை கோவை, சேலம், வேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட வெளிமாநில நகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங் களுக்கும், புதுச்சேரிக்கும் திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சாலை யை தரைப்பகுதியாகவும், வானத்தையே கூரையாகவும் கொண்டு சத்திரம் பஸ் நிலையம் இயங்கி வருகிறது.

ரூ.17 கோடியில் சீரமைப்பு

போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இந்த பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு நடைபாதை, வாகனம் நிறுத்தும் இடம், ஓய்வறை போன்ற எந்த வசதிகளும் கிடையாது. சத்திரம் பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கையை ஏற்று சீர்மிகு நகரம் எனப்படும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் சத்திரம் பஸ் நிலையம் சீரமைக்கப்பட இருக்கிறது.

இதற்காக ரூ.17 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டுமான பணியை தொடங்குவதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் சத்திரம் பஸ் நிலையத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளில் சிலர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடர்ந்த வழக்கு காரணமாக கட்டுமான பணியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

30 பஸ்களை நிறுத்தலாம்

தற்போது வழக்கு முடிவுக்கு வந்து விட்டதால் கட்டுமான பணியை தொடங்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைகளை காலி செய்து கொடுக்க தீபாவளி பண்டிகை வரை அவகாசம் கொடுக்கும் படி வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்ததாலும், போக்குவரத்தை மாற்றி அமைக்கும் திட்டத்தை மாநகர போலீசார் செயல்படுத்த வேண்டும் என்பதாலும் கட்டுமான பணிக்கான தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தீபாவளி பண்டிகை முடிந்து விட்டதால் விரைவில் கட்டுமான பணி தொடங்கப்பட இருக்கிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சத்திரம் பஸ் நிலையம் மறு கட்டமைப்பு செய்யப்பட இருக்கிறது. தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களாக இந்த பஸ் நிலையம் அமைக்கப்படும். தரைத்தளத்தில் 17 கடைகளும், முதல் தளத்தில் 16 கடைகளும் அமைத்து கொடுக்கப்படும். தற்போது இருக்கும் கூரைகள் அகற்றப்பட்டு மதில் சுவருடன் காங்கிரீட் கூரைகளாக மாற்றம் செய்யப்படும். ஒரே நேரத்தில் பஸ் நிலையத்தில் 30 பஸ்களை நிறுத்தி வைக்கும் வகையிலான நடைமேடை ஏற்படுத்தப்படும். பஸ் நிலைய வளாகத்தில் 350 இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் ‘பார்க்கிங்’ வசதியும் செய்யப்படும். இது தவிர நடைபாதை, ஓய்வறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, பாலூட்டும் தாய்மார் களுக்கான அறை, ஆண், பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பறையும் அமைக்கப் படும்” என்றனர்.


Next Story