67 தீ விபத்துகள்: சென்னையில், பட்டாசு வெடித்ததில் 85 பேர் காயம் சிறுவனின் கண்பார்வை பறிபோனது


67 தீ விபத்துகள்: சென்னையில், பட்டாசு வெடித்ததில் 85 பேர் காயம் சிறுவனின் கண்பார்வை பறிபோனது
x
தினத்தந்தி 28 Oct 2019 10:15 PM GMT (Updated: 28 Oct 2019 8:32 PM GMT)

சென்னையில் நேற்று 67 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடித்ததில் 85 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் ஒரு சிறுவனுக்கு கண்பார்வை பறிபோனது.

சென்னை,

சென்னையில், நேற்று முன்தினம் தீபாவளியையொட்டி காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு 67 அழைப்புகள் வந்திருக்கின்றன. இதில் 26 அழைப்புகள் சிறிய அளவிலான பட்டாசு விபத்துகள் ஆகும். மீதமுள்ள 41 அழைப்புகளும் எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய தீ விபத்துகள் ஆகும்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று 31 பேர் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீக்காயத்துக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 7 பேர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை நேற்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி ஆய்வு செய்தார்.

53 பேர் சிகிச்சை

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே பட்டாசு வெடித்து உண்டான தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்று சென்றுள்ளார். எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீக்காயத்தில் 53 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

கண்பார்வை பறிபோனது

இதில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 12 வயது சிறுவன் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது வெடித்து சிதறிய பட்டாசு சிறுவனின் வலது கண்ணில் பட்டது.

இதில் வலியால் துடித்த சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிறுவனின் வலது கண் பார்வை பறிபோனது.

சென்னையில் நேற்று மொத்தம் 85 பேர் தீக்காயத்துக்கான சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதுதவிர சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை, கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைகளில் நேற்று தீக்காய சிகிச்சைக்காக யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Next Story