மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு


மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு
x
தினத்தந்தி 28 Oct 2019 10:45 PM GMT (Updated: 28 Oct 2019 8:39 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.

நெல்லை,

தமிழக அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமனம் செய்யாமல், அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும்.

அரசாணை 345-ஐ மறு ஆய்வு செய்து காலமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அனைத்து அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் கடந்த 25-ந் தேதி முதல் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட அரசு மருத்துவமனை டாக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் வெளிநோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அரசு டாக்டர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த ஸ்ரீராமகிரு‌‌ஷ்ணன், முத்துக்குமார், ஜான்சன், செல்வகுமார், சரவணகுமார், ஜஸ்டின், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குறைந்த அளவு டாக்டர்கள் வேலை செய்தனர். அவர்கள், உள்நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்தனர். அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, டெங்கு காய்ச்சல் தடுப்பு பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது. வெளிநோயாளிகளின் சிகிச்சையில் பாதிப்பு ஏற்பட்டது.

ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நடந்த தர்ணா போராட்டத்தில் மயக்கவியல் டாக்டர்களும் கலந்து கொண்டனர். சென்னையில் டாக்டர்கள் உண்ணாவிரதம் இருப்பதை போல் நெல்லையிலும் டாக்டர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர். நேற்று நடந்த தர்ணா போராட்டத்தில் 6 டாக்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Next Story