திருவெண்ணெய்நல்லூர் அருகே, தம்பதியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


திருவெண்ணெய்நல்லூர் அருகே, தம்பதியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Oct 2019 10:30 PM GMT (Updated: 29 Oct 2019 5:57 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே தம்பதியை தாக்கி 5½ பவுன் நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65), இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (45). இவர்களுக்கு சொந்தமாக அதே கிராமத்தில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் அருகிலேயே இருவரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், செல்வராஜ் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த செல்வராஜ் மனைவி பாக்கியலட்சுமி அணிந்திருந்த நகையை கழற்றி தரும்படி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி இருவரும் திருடன்... திருடன் என கூச்சலிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர், இருவரையும் உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு பாக்கியலட்சுமி கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1¼ லட்சமாகும்.

மேலும் மர்மநபர் தாக்கியதில் காயமடைந்த கணவன்-மனைவி இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story