செந்துறை பகுதியில் பயன்பாடின்றி இருந்த 6 ஆழ்துளை கிணறுகள் மூடல் போலீசாருக்கு பாராட்டு


செந்துறை பகுதியில் பயன்பாடின்றி இருந்த 6 ஆழ்துளை கிணறுகள் மூடல் போலீசாருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 29 Oct 2019 11:00 PM GMT (Updated: 29 Oct 2019 8:11 PM GMT)

செந்துறை பகுதியில் பயன்பாடின்றி இருந்த 6 ஆழ்துளை கிணறுகளை மூடிய போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டு தெரிவித்தார்.

செந்துறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் மகன் சுஜித்வில்சன் வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்டு திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா மற்றும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சேவை மையம் கட்டிடத்தில் திறந்த நிலையில் பயன்பாடு இன்றி இருந்த ஆழ்துளை கிணற்றை ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் மூடினர்.

பாராட்டு

அதேபோல் இரும்புலிக் குறிச்சி அருகே உள்ள வாளரகுறிச்சியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நிலங்களில் சோதனைக்காக போட்டுவிட்டு கைவிட்டு சென்ற 4 ஆழ்துளை கிணறுகளை இரும்புலிக்குறிச்சி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி செல்வம் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் மூடினர்.

இதேபோல் செந்துறை அருகே முதுகுளம் பகுதியில் பயன்பாடு இன்றி இருந்த ஆழ்துளை கிணற்றை தளவாய் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ராயர் ஆகியோர் மூடினர். ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுத்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டினார். 

Next Story