ஆட்சியில் சமபங்கு கோரிக்கை நிராகரிப்பு பா.ஜனதா- சிவசேனா இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திடீர் ரத்து


ஆட்சியில் சமபங்கு கோரிக்கை நிராகரிப்பு பா.ஜனதா- சிவசேனா இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திடீர் ரத்து
x
தினத்தந்தி 29 Oct 2019 11:56 PM GMT (Updated: 29 Oct 2019 11:56 PM GMT)

ஆட்சியில் சமபங்கு வாக்குறுதி அளிக்கவில்லை என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். இதன் எதிரொலியாக பா.ஜனதா, சிவசேனா இடையே கூட்டணி அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை ரத்து ஆனதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை, 

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையின் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ந் தேதி வெளியானது.

இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் போதும் என்ற நிலையில், இருகட்சிகளின் பலம் 161 ஆக இருப்பதால், அந்த கட்சிகள் கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும், மந்திரி பதவியிலும் சமபங்கு வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, இது தொடர்பாக அமித்ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டதாகவும் அந்த கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறினார். ஆட்சியில் சமபங்கு தொடர்பாக பா.ஜனதா எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மும்பை ஒர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் 29 வயது மகன் ஆதித்ய தாக்கரே வெற்றி பெற்ற நிலையில், அவரை முதல்-மந்திரியாக்க சிவசேனா விரும்புகிறது.

சிவசேனா கோரிக்கை தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் மவுனம் காத்து வந்த நிலையில், நேற்று முதன் முறையாக அப்படி ஒரு ஒப்பந்தம் இரு கட்சிகளுக்கு இடையே செய்யப்படவில்லை என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பகிரங்கமாக நிராகரித்தார். அடுத்த 5 ஆண்டுகளும் நான் தான் முதல்-மந்திரியாக நீடிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்-மந்திரியின் அறிவிப்பை அடுத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக நேற்று மாலை 4 மணிக்கு பா.ஜனதாவுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை சிவசேனா திடீரென ரத்து செய்தது.

இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

நேற்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தையில், பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மூத்த தலைவர் புபேந்திரயாதவ் மற்றும் சிவசேனா சார்பில் சுபாஷ் தேசாய், சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்துகொள்ள இருந்தனர்.

இந்தநிலையில் உத்தவ் தாக்கரே அந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்து உள்ளார். முதல்-மந்திரி தான் கூறிய வாக்குறுதிகளை நினைத்து பார்க்காமல் சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி தரமுடியாது என கூறியிருக்க கூடாது. மேலும் ஆட்சி அதிகாரத்தில் சிவசேனாவுக்கு சரிபாதி பங்கு வழங்குவது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசிய வீடியோவையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பரபரப்பான நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) 1 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு மத்தியில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திடீரென கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். இவரை அடுத்து சிவசேனா மூத்த தலைவர் திவாகர் ராவ்தேயும் கவர்னரை சந்தித்தார்.

ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கவர்னருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்ததாகவும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் இரு கட்சி தலைவர்களும் தெரிவித்தனர்.

Next Story